Pages

Friday 14 November 2014


பொறுப்பற்ற ஊடகங்களால் பாதிக்கப்பட்ட பெண் !




                                                                      கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை முழுவதும் ஒரு பெண் திருடுவதாக வாட்ஸ் அப் மற்றும், பேஸ்புக்குகளில் செய்தி உலாவந்தது. "அழகாக இருப்பாள், நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசுவாள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கேஸ் கனெக்சன் கொடுக்க வந்துள்ளதாக கூறி, திருடுவாள்" என்ற இட்டுகட்ட பொய்யை கூறி அவருக்கு திருடி பட்டம் கட்டினார்கள். அப்பெண்ணின் அதனை தொடர்ந்து செய்தி தாள்களில் கூட அந்த பெண்ணின் புகைப்படத்தோடு செய்தி வந்தது. தற்போது அந்த செய்தி பொய் என்று தெரியவந்துள்ளது. அப்பெண் மேலும் அப்பெண் சைபர் க்ரைமில் சம்பந்தப்பட்டவர்கள் மீது , புகார் தெரிவித்துள்ளார். உண்மையில் அப்பெண் ஐ.டி. கம்பெனியில் பணி புரிகிறார்.தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறாக வாட்ஸ் அப் மற்றும், பேஸ்புக்களில் அவதூறு பரப்பும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. தனிநபர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களுக்கு தண்டனை வழங்க, சட்டத்தில் இடமிருக்கிறது. 66A சட்டப்பிரிவை பயன்படுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். தற்போது அப்பெண்ணின் புகாரின் பேரில் சமந்தப்பட்ட நபர் பிடிபடும் பட்சத்தில் அவர் தண்டிக்கப்படலாம். ஆனால் உண்மையை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அவசரக் கோலத்தில், அள்ளித் தெளித்த வேகத்தில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?


சமீப நாட்களில் ஊடகங்களின் பெறுப்பற்ற செயல்களால் இதுபோன்ற தவறான செய்திகள் அதிகளவில் வெளிவருகின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் என்று பெருமை பீற்றிக் கொள்பவர்களுக்கு, கொஞ்சமேனும் சமூக பொறுப்பு இருக்க வேண்டாமா? தவறான செய்தியின் மூலம் அப்பெண்ணுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய ஊடகங்கள், இப்போது அப்பெண்ணின் இழந்த மரியாதையை எப்படி மீட்டுத் தரப் போகிறார்கள்? செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல் முதலில் செய்தி சொல்லவேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் செய்த தவறால், அப்பாவி பெண் ஒருவர் அநியாயமாக பாதிக்கப்பட்டுள்ளார். திருடி என்று செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தற்போது அது தவறான செய்தி என்று தெரிந்த பின்னர், தங்களின் தவறுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது மட்டுமல்லாது, ஊடகங்களின் அயோக்கியத்தனத்திற்கு அப்பட்டமான சான்றுமாகும்...

- மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்

கம்யூனிஸ்டு தோழர்களுக்கு ஒரு கடிதம்



அன்பு தோழர்களே... தம்பிகளே...


கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி தமிழகத்தில் மிக மோசமான சூழல் நிலவிவருகிறது. மோசமான சூழல் என்று சொல்வதை காட்டிலும், அபத்தமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த அபத்தங்களை எல்லாம் பார்க்கும் போது ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலமான 1991 – 96 ஆண்டுகளில் நடந்த காட்டாட்சி தர்பார் என் மனக்கண்முன்னால் வந்து வந்து போகின்றன. ஜெயலலிதாவின் முதல் ஆட்சிகாலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்று சொல்லுமளவிற்கு “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற கொடுநெறி ஆட்சி நடந்தது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்தது, காவல் நிலையத்தில் வைத்தே சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்பட்டார், இந்தியாவையே உலுக்கிய வாச்சாத்தி கொடுமை அரங்கேறியது, கட்டாய மதமற்ற தடைசட்டத்தை கொண்டுவந்தார், மேலவளவு முருகேசன் படுகொலை நடந்தது, காவல்நிலைய கொலைகள் ஏராளமாக நடந்தது, அத்துமீறி காவல்துறையினர் சேரிகளில் நுழைந்து கொடுமைகளை இழைத்தனர், திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது, தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அத்தனை காரியங்களிலும் ஜெயலலிதா முனைப்பு காட்டினார். அரசு ஊழியர்களை மிரட்டி பணியவைத்தார். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஒரே கையெழுத்தின் மூலம் வேலையை விட்டு தூக்கினார், வேலைவாய்ப்புகள் முடக்கப்பட்டன, திருப்பூரில் தொழிலாளர்களுக்கு கஞ்சி தொட்டி திறக்கும் அவலநிலை ஏற்பட்டது, உரிமைகளுக்காக போராடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். “தமிழகமே சிறையில் இருக்கிறது” என்று அன்றைக்கு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டிருந்தபோது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் DYFI நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.



ஜெயலலிதாவின் கொடுநெறி ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்த நேர்மையான கம்யூனிஸ்டுகளில் நானும் ஒருவன். அன்றைக்கு இருந்த கம்யூனிஸ்ட், மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று போராடியது. 96யில் அதிமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள். ஊர், ஊராக சென்று ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலபடுத்தினோம். ஒவ்வொரு பேருந்தாக ஏறி, பயணிகளிடமும் ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலபடுத்தினோம். உரிமைகளுக்காக போராடுபவர்களின் உற்ற தோழனாக இருந்தோம். சிதம்பரம் பத்மினிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டம் அளப்பரியது. வாச்சாத்தி கொடுமையை உலகறிய செய்து, நீதிக்காக போராடியது கம்யூனிஸ்டுகள். தலித் மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தினோம். பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த சனநாயக இயக்கங்களோடு இணைந்து போராடினோம். தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடினோம், மதவாதத்தை எதிர்த்து போராடினோம், மொத்தத்தில் அநீதிக்கு எதிராக போராடினோம். இப்படியாக கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

91யில் ஆசிரியர்களுக்காக மவுண்ட்ரோட்டில் நடந்த போராட்டத்தில் ஜெயலலிதா அரசு காவல்துறையின் காட்டுமிராண்டிதனங்கள் என்றும் என்னால் மறக்க முடியாத கொடுமை. அன்றைக்கு நடந்த போராட்டத்தில் பெண் தோழர் ஒருவரை காவல்துறையினர் அடிக்க முயன்றபோது, குறுக்கே நான் பாய்ந்து தடுத்தேன். அத்தனை அடிகளையும் என்மேல் தாங்கினேன். அருகில் இருந்த கடைக்குள் தள்ளி பெண் தோழரை காப்பாற்றினேன். திமிர்பிடித்த போலீஸ்காரன் என் நெஞ்சில் எட்டி உதைத்த போது, அந்த வலிகளையும் தாங்கி கொண்டு, ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று பெருமைபட்டேனே ஒழிய, ஒருபோதும் வேதனைப்படவில்லை. அன்றைக்கு “கம்யூனிஸ்ட் என்பவன் நேர்மையானவன், நேர்மையான அரசியலுக்கு துணைபோக கூடியவன்” என்று நினைத்து என்னை போன்ற பலரும் பெருமைபட்டார்கள். எந்த ஜெயலலிதாவின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து தடியடி வாங்கினோமோ, எந்த ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலபடுத்த போராடினோமோ, அந்த ஜெயலலிதாவோடு கூட்டணி என்று அகில இந்திய தலைமை அறிவித்தவுடன் மனதளவில் நொறுங்கி போனோம். கம்யூனிஸ்ட்களால் கிழிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முகத்திரை, மீண்டும் கம்யூனிஸ்டுகளாலே ஒட்டப்பட்டது. மக்கள் விரோதி என்று என்னைப் போன்றவர்களால் உச்சரிக்கப்பட்ட ஜெ.வை புரட்சி தலைவி என்று உச்சரிக்க அகில இந்திய தலைமை வலியுறுத்தியது. ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மாறி, மாறி கூட்டணி வைத்ததால் மக்களோடு மக்களாக நின்ற கம்யூனிஸ்ட்கள், பின்னாளில் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டார்கள். நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன். இயக்கத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டாலும் இன்றைக்கும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்டின் உணர்வுகளோடு, அண்ணன் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களின் தலைமையில் சிறுத்தையாய் சாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு போன்ற களங்களில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் அநீதிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்வானே ஒழிய, அதற்கு ஆதரவாக அமைதி கொள்ள மாட்டான். அப்படித்தான் நானும் என்னால் முடிந்தவரை அநீதிகளை எதிர்த்து குரல்கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் அவர்களே கூட, “நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று சொல்லுமளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேர்மையும், களப்பணியும் பாராட்டத்தக்கது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அன்றைக்கு மவுண்ட் ரோட்டில் நடந்த போராட்டத்தில் நெஞ்சில் உதைபட்டு வந்த எனக்கு, என் அம்மா அழுத கண்களோடு மருந்து போட்டார்கள். அதோடு ஜெயலலிதாவை வாய்க்கு வந்த வார்த்தைகளால் வசைபாடினார்கள். தமிழ்நாடே ஜெயலலிதாவிற்கு சாபம் இட்டது. இன்றைக்கு என் அம்மா வயதுடைய பெண்கள் எல்லாம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்காக ரோட்டில் கிடந்தது மாரடித்து கொண்டு அழும் காட்சியை காணும் போது நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடவேண்டிய சமூகம், இவ்வளவு தூரம் காயடிக்கப்பட்டிருக்கிறதே என்ற ஆற்றாமையில் தவிக்கிறேன். மறுபுறம் பலரும் அதிமுக தொண்டர்களின் முறையற்ற செயல்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வித கருத்தியலும் இன்றி, வெறும் உணர்ச்சியின்பால், கவர்ச்சியின்பால் ஒரு தலைமையை ஏற்றுக்கொண்ட அவர்கள், அவரவர் சுயத்தை மையாக கொண்டு, அவர்களின் தலைமைக்கு விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய கருத்தியலை, கோட்பாட்டு பொக்கிஷத்தை பெற்றிருக்கும் கம்யூனிஸ்டுகள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் எண்ணி பார்க்க வேண்டும். இந்த சமூகம் இவ்வளவு தூரம் காயடிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நேர்மையான கம்யூனிஸ்ட் என்ற முறையில், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீதே என் விமர்சனத்தை முன்வைக்க விரும்புகிறேன். மக்களின் உரிமைகளுக்கும், நேர்மையான அரசியலை மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கம்யூனிஸ்டு இயக்கம், ஒரு சிலரை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவதற்கும், ஊழல்வாதிகளை மாறி, மாறி வளர்த்துவிட்டதில் பெரும் பங்கு வகித்தார்கள். மக்கள் விரோதிகளை மிக சரியாக அடையாளம் காட்ட தவறியவர்கள். காங்கிரசை ஊழல் இயக்கம் என்று குற்றம் சுமத்தினார்கள், ஆனால் கம்யூனிஸ்ட்களின் ஆதரவோடு பத்தாண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்தது. மதவாதத்தை எதிர்ப்போம் என்றார்கள், இன்றைக்கு மதவாத பிஜேபி, அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துவிட்டது. இன்றைக்கு நடக்கும் அபத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகளும் ஒருவிதத்தில் பெறுப்பேற்கத்தான் வேண்டும். “தனி மனித ஊழல்களால் தேசம் பாழ்பட்டுவிடாது” எனக்கூறி ஊழல்வாதி ஜெயலலிதாவின் செல்வாக்கை மக்கள் மன்றத்தில் மீண்டும் வளர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள். மதவாத எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, சாதிபேத எதிர்ப்பு, பாட்டாளி வர்க்க ஒற்றுமை போன்ற பல்வேறு சுமைகள் கம்யூனிஸ்டுகள் முன் கிடந்தாலும், ஒரு தவறுக்காக, இன்னொரு தவறை ஆதரிக்க கூடிய பரிதாபகர நிலைக்கு கம்யூனிஸ்டுகள் சென்றதேன்? என்ற கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. மக்களை நம்பாமல், ஊழல் இயக்கங்களை நம்பியதன் விளைவே அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கும் பெரும்பாலான தோழர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நேர்மை, இந்த சமூகத்திற்கு துளியும் பயன்படவில்லை என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. தன்னளவில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட, தேர்தல் அரசியலில் சதுரங்க விளையாட்டில் சிக்கி சிதறுண்டு போய் கொண்டிருக்கிறார்கள்.

தன் தவறுகளை உணர்ந்து, மீண்டும் தோழர்கள், மக்களோடு கரம் கோர்த்து, மதவாதிகளையும், ஊழல்வாதிகளையும் ஒரே நேர்க்கோட்டில் அம்பலப்படுத்தி உண்மையான மக்களாட்சி மலர பாடுபடவேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் ஆத்மார்த்தமான விருப்பமாகும்...
தோழர்கள் செய்வார்களா???


- மடிப்பாக்கம் ச.வெற்றிசெல்வன்.

Wednesday 12 November 2014

வயிறு வளர்ப்பதற்கல்ல சமூகநீதி !

இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி கோட்பாடு இந்தியளவில் பல்வேறு ஆண்டுகளாகவே விவாதப் பொருளாக இருந்துவருகிறது. சமூக நீதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து குரல்கள் வலுத்துக் கொண்டே வருகிற சூழலில், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற குரலும் வலுவாக ஒலிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களாகவே இருக்கிறார்கள். இதுநாள்வரை சமூகநீதி அரசியல் பேசியவர்கள் கூட தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். 'சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான், எல்லா சமூக மக்களுக்கும் உரிய பிரிதிநிதித்துவத்தை சரியாக பகிர்ந்தளிக்க முடியும், அதுதான் சமத்துவத்திற்கான வழி' என்று வாதிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் மேலெழுந்தவாரியாக பார்க்கையில், இது சரியான கருத்தாக தோன்றினாலும், கூட சமூக நீதி பார்வையில் அது சரியான கருத்தல்ல. சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிற சமத்துவவாதிகள் “பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் கடும் வறுமையில் இருப்பதோடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கியுள்ளதாகவும்” கூறுகிறார்கள். சமத்துவவாதிகளின் இந்த கூற்றின் மூலம் நாம் ஒன்றை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அதாவது சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் அவர்களின் நோக்கம் சமூக நீதியல்ல, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வறுமையை போக்க, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதி என்பது வெறும் பொருளாதார கண்ணோட்டம் அல்ல, அது சமூக கண்ணோட்டமாகும். அதாவது சாதிக்கொடுமையும், அதனூடான தீண்டாமைக் கொடுமையும் உச்சத்தில் இருந்த காலங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் மோசமான இழிவுக்கும், கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அத்தகைய கொடுமைகளால் சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்தார்கள். சமூக கொடுமையில் இருந்தும், அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த இழிவுகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கும் நோக்கத்தையே இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி கோட்பாடு பிரதானமாக கொண்டிருக்கிறது. அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவுகளில் இருந்து விடுபட்டு, சமூகத்தின் சகல வாய்ப்புகளை அவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக கல்வியும், அதிகாரங்களும் மறுக்கப்பட்டு, அடிமாடுகளை போல கொடுமைபடுத்தப்பட்ட அவர்களை அக்கொடுமைகளில் இருந்து விடுவிக்கவும் தான் கல்வியில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றபடுகிறது. ஆக சமூகநீதியின் நோக்கம் இதுவாக இருக்கும் போது, ஒருவனின் வறுமை நிலையை காரணம் காட்டி, அவனின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது எப்படி சமூக நீதி கொள்கையாக இருக்க முடியும்?  

சாதிவாரி கணக்கெடுப்பும் - பொருளாதார சமத்துவ வாதமும்

இன்னென்ன சாதியை சேர்ந்தவர்கள், இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற கணக்கெடுப்பை எடுப்பதனால் என்ன இழப்பு வந்துவிட போகிறது? என்று எளிதாக எல்லோரும் கேட்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பினால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு கிடைக்கும், இப்போது இருப்பதை விட கூடுதலான ஒதுக்கீடுகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் நாக்கில் தேன் தடவிக் கொண்டு பேசுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அப்படியான எந்த உறுதியையும் கொடுக்கவல்லதாக இல்லை. நாடெங்கிலும் இருக்கும் பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் தங்களை பிற்படுத்தபட்டோர் மற்றும் மிக பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் தீண்டாமைக் கொடுமையில் இருந்து தப்பி பிழைக்க கிறித்தவ மதங்களுக்கு சென்ற கோடிக்கணக்கான தலித் கிறித்தவர்கள் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள். இசுலாமிய மதங்களுக்கு சென்ற தலித்துகள் ஏராளமானோர் சிறுபான்மையினர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படியாக தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதையும், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தபட்டோர் சாதி மக்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதையும் அறிந்தே தான், ராமதாஸ் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதி தலைவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பை தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். எங்கள் சாதிக்காரர்கள் இத்தனை கோடி பேர் இருக்கிறோம் என்று தங்கள் சாதி வலிமையை கூட்டி காட்டி, நாங்களே இந்த நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் என்று பேசத் துவங்கி விடுவார்கள். அதனால் எண்ணிக்கையில் மிக குறைவாக இருக்கிற சாதியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படலாம்.

மதம் மாறிய தலித்துகள், அவர் கிறிஸ்தவ  மதத்திற்கோ அல்லது முஸ்லிம் மதத்திற்கோ மற்ற எந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் அவர்களும் தலித் பட்டியலில் இருந்தே பயன் அடைய வேண்டும். ஒருவர் கிறிஸ்தவராக மாறிவிடுவதால் அல்லது இஸ்லாமியராக மாறிவிடுவதால் அவனை புழுங்கும் சாதியாக எந்த சாதியும் கருதுவதில்லை. மாறாக நாடர் கிறிஸ்தவர், தேவர் கிறிஸ்தவர், நாயுடு கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்று சாதி ரீதியாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் தலித் கிறிஸ்தவர்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைத்து தலித் மக்களுக்கு மிக பெரிய துரோகம் இந்த அரசு செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தலித் அல்லாத அனைத்து சாதியினர் கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்களும், சாதிய வன்கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டு வரும் சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு செய்வதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் மீது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களின் பெரும்பான்ப்மை பலத்தை கொண்டு மீண்டும் மேலாதிக்கத்தை நிறுவ முயல்வார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.       

கணக்கெடுப்பு முடிவில் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு உரிய ஒதுக்கீடு முறையாக அளிக்கப்படவில்லை என்கிற வாதம் வலுப்பெறுமானால், அவர்களுக்கான கூடுதல் ஒதுக்கீட்டை எங்கிருந்து பெற்றுக் கொடுப்பார்கள்? என்கிற முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. அதாவது 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 18 சதவிகித இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதமிருக்கிற 32 சதவிகிதத்தை தான் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த விகிதாச்சாரம் போதவில்லை, அவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமெனில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிற ஒதுக்கீட்டில் இருந்து பறித்து தான் அவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதத்தைத் தாண்டக் கூடாது என இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் இட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒதுக்கீட்டை குறைத்து, பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தபட்டோர்களுக்கு உயர்த்தி கொடுக்கவே ஆட்சியாளர்கள் எத்தனிப்பார்கள். 18 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கும் போதே, நடைமுறையில் வெறும் 4 சதவிகிதம், 5 சதவிகிதம் என்கிற அளவில் தான் அமுல்படுத்தபடுகிறது. எதார்த்தம் இப்படி இருக்கையில் பதினெட்டிலும் குறைத்துவிட்டால், நடைமுறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுத்தமாக ஒதுக்கீடே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதுதான் உயர்சாதி இந்துக்களின் திட்டமாகவும் இருக்கிறது. 


பொருளாதார சமத்துவ வாதம் ஏற்புடையதா?

இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறவர்கள், “அவரவர் பங்கு அவரவர்க்கு கிடைக்கவேண்டும்” என்கிற ரீதியில் பேசுகிறார்கள். அதுதான் சமத்துவத்திற்கான வழி என்றும் சொத்தையான வாதத்தை முன்வைக்கிறார்கள். பொருளாதரத்தில் சமத்துவம் வேண்டும் என்று வரிந்து கட்டுகிற இவர்களுக்கு, இன்றைக்கு நாட்டில் நிலவும் சாதிக்கொடுமையினால், மனிதனுக்கிடையிலே சமத்துவம் இல்லை என்பது தெரியாதா? ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் தாழ்த்தப்பட்டவர், கோவிலுக்குள் சென்றுவிட்டார் என்பதால் கோவிலை தூய்மைபடுத்திய கொடுமை நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்ததல்ல, அந்த கொடுமை நிகழ்ந்து சில மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் எனும் உயரிய பொறுப்பில், அதிகாரத்தில் இருக்கும் அவருக்கே இந்த நிலைமை என்றால், ஒரு பாமர தாழ்த்தப்பட்டவன் அன்றாடம் எத்தனை இழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறான் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். தாழ்த்தப்பட்டவன் எங்கும் செல்லலாம், யாரோடும் பழகலாம், விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற சமத்துவமான நிலை இல்லாத சூழலில், பொருளாதார சமத்துவத்திற்கு என்ன அவசரம் வந்துவிட்டது? ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் கூட, ஒரு சாதாரண உயர்சாதி இந்துக்களின் பார்வையில் தீண்டப்படாதவராகவே பார்க்கபடுகிற சூழலில் இன்னமும் இங்கு மனித மனங்களிலே சமத்துவ எண்ணம் இல்லாத நிலையில் பொருளாதார சமத்துவ வாதம் என்பது ஏற்புடையது கிடையாது. 

பொருளாதார சமத்துவ வாதம் பேசுபவர்களுக்கு சில கேள்விகள்

1. பொருளாதார ரீதியில் எல்லா மக்களுக்கும் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால்  இங்கே ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதி இழிவு நீங்கிவிடுமா?

2. ஒருவரிடம் இருப்பது போல, பணமும், சொத்தும், ஆடம்பர வசதிகளும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவது தான் சமத்துவம் என்றால் வசதி வாய்ப்புகளோடும், மாநிலத்தின் முதல்வர் என்ற உயரிய அதிகாரத்தோடும் இருப்பவர் மீதே, அவர் தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்திற்காக தீண்டாமை கொடுமை பிரயோகிக்கபடுகிறதே அதற்கு பெயர் என்ன?

3. சாதிவாரி கணக்கெடுப்பு கோருபவர்களின் கூற்றுப்படி, என்னிடம் இருக்கும் பணத்தையும், சொத்துக்களையும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க நான் தயார். அதேபோல ஆண்டாண்டு காலமாக என் முப்பாட்டன்கள் மீதும், என்மீதும்  சுமத்தப்பட்டிருக்கும் சாதி இழிவுகளை உயர்சாதி இந்துக்களும் பகிர்ந்து கொள்ள தயாரா?

4. ஒருவனின் வறுமை நிலையை காரணம் காட்டி, அவனின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இட ஒதுக்கீடு கேட்பது எப்படி சமூக நீதி கொள்கையாகும்? அப்படியெனில் பார்ப்பனர்களில் கூட கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்துவிடலாமா?
  

5. ஒவ்வொரு ஆண்டும் கவுரவக் கொலைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதே அதற்கு என்ன காரணம்? பொருளாதார சமத்துவம் இல்லாமை தான் காரணமா?

6. சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் ராமதாஸ் போன்றவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை காப்பதற்காகவா கணக்கெடுப்பு கோருகிறார்கள்?

7. பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள் முதலானோர் கடும் வறுமையில் இருப்பதோடு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின் தங்கி இருக்கிறார்கள் எனில், அறுபது ஆண்டுகால இட ஒதுக்கீடு கொள்கையினால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டார்களா?

8. சட்டப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற போதே, முழுமையாக அமுல்படுத்தாதவர்கள், அதையும் குறைத்துவிட்டால், முழுமையாமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடே வழங்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

9. முந்தைய காலங்களில் பிராமிணர்கள், அவர்களுக்கு கீழிருந்த சாதியினரை மேலாதிக்கம் செய்ததை போல, இப்போது பிராமிணர் அல்லாதவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மேலாதிக்கம் செய்கிறார்கள். தற்போது அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை கொடுத்து அவர்களை மேலும் வலுப்படுத்தினால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்னமும் மோசமான மேலாதிக்கங்களை செலுத்தமாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஊத்திரவாதம் இருக்கிறதா?         
   
மேலுள்ள என் எந்த கேள்விக்கும் நேர்மையாக பதில் கூறுகிற எவரும், இந்திய சமூக சூழலில் நிலவிவரும் மோசமான சாதிய வன்கொடுமைகளையும், அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் ஒப்புக் கொள்வர். ஆக தாழ்த்தப்பட்டவர்கள் பொது சாலையில் நடக்க முடியாத சமூகத்தில், பொதுக்குளத்தில் நீரெடுக்க முடியாத சமூகத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடந்து விரும்பியவர்களோடு சவுகரியமாக புழங்க முடியாத சமூகத்தில், கோவிலுக்குள் செல்ல முடியாத நிலையிருக்கிற சமூகத்தில் பொருளாதார சமத்துவவாதம் அபத்தமானது என்கிற என் வாதத்தையும் ஒப்புக் கொள்வர் என்று நம்புகிறேன். 

இந்த மானுடத்தின் பிரிதிநிதிகளான, கடைசி மனிதர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதிய ஏற்றதாழ்வுகள் அற்ற சமூக சமத்துவம் கிடைக்கும் வரை பொருளாதார சமத்துவவாதம் என்கிற மோசடித்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதிவாரி கணக்கீடு கோருகின்ற, பொருளாதார சமத்துவவாதம் பேசப்படுகின்ற இன்றைய சூழலிலும் கூட, தாழ்த்தப்பட்டவர்கள் ஏராளமான வன்கொடுமைகளுக்கும், தீண்டாமை இழிவுகளுக்கும் உள்ளாகி கொண்டிருக்கிறார்கள். ஆக பொது சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்தை, தாழ்த்தப்பட்டவர்களை சக மனிதராக உயர்சாதி இந்துக்களும், இந்துத்துவ அடிப்படைவாதிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்வரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடுகளை முழுமையாக எல்லா தளங்களிலும், கல்வி முதல், அரசியல் அதிகாரம் வரை எல்லா மட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீட்டை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.  

என்னை சக மனிதனாக ஒப்புக்கொண்டு, என்மீது திணிக்கப்பட்டிருக்கும் தீண்டாமை கொடுமைகளுக்காக உயர்சாதியினர் வெட்கி தலைகுனியும் நாளன்று உங்களோடு சேர்ந்து நானும் பொருளாதார சமத்துவ வாதத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயார். அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுக்க வேண்டும். அதோடு மனிதனுக்கு, மனிதன் சமத்துவம் உருவாகும் வரை சமூகநீதி கோட்பாடு பாதுகாக்கப்படும். சமூகநீதி என்பது சமூகத்தின் கீழிருப்பவரை மேலுக்கு கொண்டுவர செயல்படுத்தப்படும் சிறப்பு முன்னுரிமையே தவிர, மேலிருப்பவர்களை மேலும் வலுப்படுத்துவதற்கு அல்ல. அதோடு சமூகத்தில் சமத்துவத்தை நிறுவ முயலும் மகத்தான கோட்பாடே சமூகநீதியாகும், மாறாக வசதி வாய்ப்புகளையும், பொருளாதார வலிமையும் பெற்று வயிறு வளர்ப்பதர்க்கல்ல...

- மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்

Thursday 8 May 2014

https://soundcloud.com/madipakkamvetriselvan/ammaye-amma-enra-perum-theivam


அம்மா என் வெளிச்சம் ....

அன்பு உறவுகளே !! தோழர்களே !! நண்பர்களே !!!!! இந்த உலகில் ஒரு மனிதன் பிறந்து மடியும் வரை ஆயிரக்கணக்கான உறவுகளையும்,நண்பர்களையும் சந்திக்கின்றோம். ஒரு மனிதனிடம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுவதற்கு எத்தனையோ உறவுகள் அன்பாய் இருப்பது போல நட்பாய் இருப்பது போல என் உயிருக்கு உயிராய் நேசிக்குறேன் என்று சொல்லுவதை போல உறவுகளை நாம் இந்த மண்ணில் சந்திக்கிறோம் . ஆனால் கால ஓட்டத்தில், அப்படி சொன்ன உறவுகள் எல்லாம் தங்களுடைய சுயங்களை காப்பதற்காக சொன்ன சொல்லில் இருந்து மாறி விலகி இருக்கிறார்கள் . அன்பை விலை பேசுகிறார்கள், நம்பிக்கையை, சிதைக்கிறார்கள்.ஆனாலும் நாம் இந்த பூமியில் புதிய புதிய உறவுகளோடு இணைந்து பயணப்பட்டு கொண்டே இருக்கிறோம் .

எந்த சுயமும் இல்லாமல் ; எந்த லாப நோக்கமும் இல்லாமல்; கண்மூடி தனமாக அன்பையும் பாசத்தையும் , நம்பிக்கையும் . ஒரு மனிதன் மீது வைத்து பாராட்டி,சீராட்டி இந்த பூமியில் நிலையாய் நிற்கும் வரை துணையாய் இருந்து. அந்த மனிதன், அவனையும் காப்பாற்றி கொண்டு.அவன் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் நிலமைக்கு வரும் வரை ஒரு குழந்தையை போல உச்சிமுகர்ந்து பாசம் காட்டி. இந்த பூமியில் ஒரு மனிதனை நிலை நிறுத்துகிற ஒரே உறவு “அம்மா” என்ற பெரும் தெய்வம் மட்டுமே.

ஆம், நண்பர்களே பத்து மாதம் சுமந்து வலியும் வேதனையும் தாங்கி ஒரு குழந்தையை பெற்று எடுக்கிற தாய் அந்த குழந்தைக்கு பேச தெரியாது, பசி என்று கேட்க தெரியாது; தாகம் என்று சொல்ல தெரியாது, ஆனாலும் அந்த குழந்தையின் சினுங்களிலே அதனுடைய படுக்கை சரி இல்லை என்று உணர்ந்து சரி செய்கிறாள் அம்மா !!

குழந்தையின் உதடுசற்று காய்ந்து போய் இருந்தாலும் அதற்க்கு உடனே தண்ணிர் தேவை என்று உணர்ந்து தண்ணிர் தருகிறாள் அம்மா!!

குழந்தையின் வயிறு உள்வாங்கி இருந்தாலும் தன்னுடைய இரத்ததை பால் ஆக்கி அந்த பெரும் தெய்வத்தின் மார்பு வற்ற வற்ற அந்த பிள்ளையின் வயிறு முட்ட முட்ட பசி ஆற்றி தூங்க வைக்கிறாள்.

ஒரு குழந்தை தனக்கு என்ன என்று கேட்காமலே அதனுடைய தேவையை உணர்ந்து பாசம் காட்டி படிப்படியாக வளர்ந்து ஆளாக்கி எந்த பிரதிபலனையும் எதிர்பாக்காமல். அந்த குழந்தையின் நலன் மட்டுமே முன்னிருத்தி வாழ்கிற ஒரு தெய்வம் அம்மா.

ஒரு பிள்ளையை காப்பதற்காக ஒரு தாய் வீட்டுவேலை செய்து காட்டுவேலை செய்து, கழனி வேலை செய்து, வலிகளையும் , வேதனைகளையும் தாங்கி, தன் பிள்ளையிடம் மட்டும் புன்முறுவலை காட்டி கிழிந்த சேலையை அவள் உடுத்தி கொண்டு புத்தம் புது ஆடையை குழந்தைக்கு அணிவித்து பெருமை அடையும் பெரும் தெய்வம் அம்மா.

ஒரு குழந்தை சிறுவனாய் வாலிபனாய்,திருமணமாகி, ஒரு குடும்பத்தின் தலைவனாய்; அவன் ஒரு குழந்தைக்கு அப்பனாய்; அவன் பெற்றெடுத்த குழந்தைக்கு திருமணம் செய்துவைத்து மாமனாராய் , தாத்தாவாய் மாறி வருடங்கள் பல கடந்து வயது ஆகி இருந்தாலும் அந்த தாய் கடைசி வரை அந்த மகனை குழந்தையாகவே பார்க்கிறாள்.

ஆம் நண்பர்களே!! எனது தாய் அம்மாயி அம்மாள், அவள் சாகும் வரை என்னை குழந்தையாகவே நடத்தினார்கள்,ஊருக்கே நான் சோறு போட்டு கொண்டு இருப்பேன், ஆனால் என் தாய் குழந்தை சாப்பிடுச்சா! சாப்பிடுச்சா!!!! என்று நூறு முறை கேட்டு கொண்டு இருப்பார்.

காலையில் நான் வெளியே சென்று என் தொழிலையும்,அரசியல் பணியையும் முடித்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் சாப்பிட்டு விட்டு ஒரு 12 மணிக்கு வருவேன். என் தாய் வீட்டு வாசலில் ரோட்டு ஓரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு இருப்பார். நான் காரை விட்டு இரங்கியதும் சாப்பிட்டியாபா என்று கேட்பார், சாப்பிட்டேன் அம்மா என்று சொன்ன பிறகு என்னோடு தட்டி தடுமாறி வீட்டுக்குள் வருவார். அந்த தாயின் படுக்கையின் அருகில் ஒரு தட்டில் சாதம் போட்டு வைத்து இன்னொரு தட்டால் அதை மூடிவைத்து இருப்பார்கள். ஒரு சொம்பு நிறைய தண்ணிர் இருக்கும். நான் உள்ளே போனதும் அம்மா சாப்பிட அமர்வாள். நான் உடை மாற்றி வருவதற்க்குள் சாபிடுபா சாப்பிடுப்பா என்று பலமுறை என்னை கேட்டு கொண்டே இருப்பார்கள்.

நான் சாப்பிட்டு விட்டேன் நீ சாப்பிடு அம்மா என்று சொன்னாலும் ஒரே ஒரு வாய் சாபிடுப்பா என்று தொல்லை செய்து , ஒரு பெரிய உருண்டையை சின்ன உருண்டை தான் என்று சொல்லி வலுகட்டாயமாக உணவை ஊட்டி விடுவால்.
ஏன் அம்மா இப்படி பண்ற நான் என்ன குழந்தையா என்று சலித்து கொண்டே சொன்னால் அம்மா சத்தமாக சிரித்து கொண்டே நீ எப்பவுமே எனக்கு குழந்தைதான் ராசா என்று மனம் உருகுவாள். அப்படி பாசம் காட்டி வளர்த்த என் பெரும் தெய்வம் அம்மா , என் அம்மா இந்த உலகைவிட்டு மறைந்து விட்டார்.

அந்த பெரும் தெய்வத்தின் நினைவுகளோடு,அவள் பட்ட கஷ்டங்களையும், பாடுகளையும் என்னை வளர்க்க, அவர் சிந்திய வேர்வையும், கண்ணீரையும் நினைத்து கொண்டே பயணம் செய்கிறேன்.

இன்று அன்னையர் தினம்! என்று சொல்கிறார்கள் இல்லை!! இல்லை!!
இது பெரும் தெய்வத்தின் நாள்,
எந்த தெய்வமும் இதற்க்கு நிகரும் இல்லை,
எந்த தெய்வமும் இதற்க்கு சமும் இல்லை.
அந்த பெரும் தெய்வத்தின் நினைவாக கவிஞர். கபிலன், அவர்களின் வரிகளில் , தோழர் ஜெயமூர்த்தி அவர்களின் குரலில், சாய்சுரேஷ் இசையில் அமைத்த பாடல் இதோ , உங்களுக்காக வெளியிடுகிறேன்.

தோழர்களே!!! அம்மா என்ற பெரும் தெய்வத்தை பாசம் காட்டுங்கள் பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் நீங்களும் என்னை போல வெறுமையான மனிதர்களே.

அம்மா என் வெளிச்சம்
மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன்.
https://soundcloud.com/madipakkamvetriselvan/ammaye-amma-enra-perum-theivam